Pages

Ads 468x60px

Social Icons

Featured Posts

Monday, June 10, 2013

சித்திர மேகலை - 1

திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘இலக்கியச் சித்திரம் - சித்திர மேகலை’ என்ற தலைப்பில் சித்ரலேகா என்கிற ஒவியர் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் பழைய ஆனந்தவிகடன் 59-60 ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். வாராவாரம் ஒரு பக்கம் ஓவியமும், மறுபக்கம் கி.வா.ஜ. அவர்களின் அழகுத் தமிழுடனும் படிக்க ரசனையாக இருந்தது. அதை அவ்வப்போது தொடர்ந்து இங்கு வெளியிடலாம் என்று விருப்பம் எனக்கு.  உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...

                                                                    1. இந்திர விழா

ணார்! டணார்! டணார்! டணார்!

முரசொலி முழங்கியது. காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளில் உலாவிய மக்கள் யாவரும் அந்த ஒலி வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ‘‘என்ன ஒலி இது? அரண்மனையில் ‌ஏதேனும் திருமணமா? அல்லது வேறு புதிய நிகழ்ச்சி உண்டா?’’ என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

‘இந்திரன் கோவில் பக்கமிருந்தல்லவா வருகிறது?’’ என்று ஒருவர் இடைமறித்தார்.

வச்சிரக்கோட்டம் என்ற இந்திரன் கோயில் முரசுதான் அது. அதை யானையின் மேல் ஏற்றிச் செய்தி வள்ளுவன் என்ற அதிகாரி அதை அடிக்கிறான்.

இப்போது அவனுடைய குரல் கணீர் என்று கேட்கிறது. ‘‘புகார் நகரம் வாழ்க! மாதம் மும்மாரி பொழிக! ‌சோழ மன்னர்பிரான் செங்கோல் சிறந்து விளங்குக! அவன் வாழ்க!’’ என்று செய்தியைச் சொல்லத் தொடங்கி விட்டான். தெருவில் உள்ள மக்கள் அத்தனை பேரும் மூச்சை அடக்கிக் கொண்டு கேட்கிறார்கள்.

‘‘நகரத்தில் உள்ள மக்கள் யாவரும் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இந்திர விழாவைக் கொண்டாட வேண்டும். இது அரசர் ஆணை!’’ என்று அவன் உரக்கச் சொல்லி முழங்குகிறான்.

இந்திர விழா என்பது காதில் விழுந்தவுடன் எல்லோருடைய முகத்திலும் ஒரு புதிய மலர்ச்சி புகுகிறது. பலகாலமாக நின்றுபோன விழா அல்லவா?

‘‘இந்திர விழா எப்படி உண்டாயிற்று தெரியுமா?’’ என்று ஒருவர் கேட்கிறார்.

‘‘தெரியுமே... பழங்காலத்தில் அகத்தியரே இந்த விழாவை நடத்த ஏற்பாடு செய்தாராம். தூங்கெயில் எறிந்த ‌தொடித்தோள் செம்பியன்தான் முதல் இந்திர விழாவை நடத்தினானாம். இந்திரனையே அந்தச் சோழ மன்னன் நேரே வேண்டிக் கொண்டதாகவும் அல்லவா கதை சொல்கிறார்கள்?’’

‘‘இந்திர விழா எத்தனை நாள் நடக்கும்?’’

‘‘சரியாக இருபத்தெட்டு நாள்...’’


முரசொலி நின்று மறுபடியும் செய்தியைச் சொல்கிறான் யானை மேல் இருப்பவன். ‘‘வீதியெல்லாம் தோரணம் நாட்டுங்கள். பூரண கும்பமும் பாலிகைகளும் வைத்து அலங்கரியுங்கள். பாவை விளக்குகளை வரிசையாக ஏற்றுங்கள். கமுகங் குலைகளையும், வாழைக் குலைகளையும், பூங்கொடிகளையும், கரும்புகளையும் கட்டுங்கள். திண்ணைகளை அலங்கரியுங்கள். முத்துமாலைகளைத் தொங்க விடுங்கள்...’’

மறுபடியும் முரசு முழங்குகிறது. மீட்டும் அவன் அறிவிக்கிறான். ‘‘மக்கள் கூடும் இடங்களிலும் வீதிகளிலும் பழைய மணலை மாற்றிவிட்டுப் புதுமணலைப் பரப்புங்கள். எல்லாக் கோயில்களிலும் அலங்காரஞ்‌ செய்து விழா நடத்துங்கள். அங்கங்கே நல்லுரை வழங்குவோர் வழங்கட்டும். பட்டிமண்டபத்தில் சமயப் புலவர்கள் கூடி ஆராய்ச்சியுரை நிகழ்த்தட்டும். சண்டையின்றிச் சச்சரவின்றி அமைதியாக நடந்து கொள்ளுங்கள்.’’

டண்டணார்! டண்டணார்! - முரசொலி இது.

இறுதியில் அவன் சொல்லி முடிக்கும் வாழ்த்தின் உயர்வை என்னவென்று சொல்வது! லட்சிய நாட்டின் வளவாழ்வுச் சூத்திரம் அது! பசியும் பிணியும் பகையும் போக, மக்களுக்குப் பொலிவும், நாட்டில் வளமும் சுரக்க வேண்டும் என்று வாழ்த்துகிறான்.

‘‘பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க...!’’ என்பது அவன் கூறும் வாழ்த்து. அதன் ஒலியோடு மக்கள் இதயங்கள் உவகை பொங்க, இன்பத் துள்ளல் துள்ளுகின்றன. எல்லோருடைய வாயிலும் ‘‘இந்திர விழா! இந்திர விழா!’’ என்ற வார்த்தைகள்தான் உரத்து ஒலிக்கின்றன!
மேலும் வாசிக்க... "சித்திர மேகலை - 1"

Wednesday, May 29, 2013

கரையெல்லாம் செண்பகப் பூ

சுஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள்ளலும், புதுமைகள் படைக்க வேண்டும் என்ற தீராத துடிப்பும் இருந்ததைக் காணலாம். இடைக்காலத்தில் எழுத்து நடையில் ‘கிம்மிக்ஸ்’களுக்கு விடைகொடுத்து விட்டு அழகாய் கதையை வர்ணித்து நகர்த்திச் செல்வார். பிற்காலத்தில் வந்த எழுத்துக்களில் அவருக்கே உரித்தான வார்த்தைச் சிக்கனம் மறைந்து நெடிய கதைகளாக எழுதினார். ஆன்மிகமும் அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டது அவரது எழுத்துக்களை. சுஜாதா என்கிற எழுத்தாளரின் பெயர் பிரபலமான இடைக்காலத்து எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடி்த்தமானது ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ நாவல்.

பாஸஞ்சர் திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது. ஒரு பெண் ஓடிஓடி வெள்ளரிப் பிஞ்சு விற்றாள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஓர் இளைஞன் நீலநிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கினான். அவன் கழுத்தி்ல காமிரா மாலை. அந்தப் பிரதேசத்தில் மிக வினோதனாக, அன்னியனாக நின்றான். -இப்படி ஆரம்பிக்கிற பாராவிலேயே ஒரு காட்சியை உங்கள் மனக்கண்ணின் முன்னால் விரித்து, கட்டிப் போட்டு விடுவார் சுஜாதா. அதன்பின் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி கதையைக் கொண்டு செல்வது சுஜாதாவின் எழுத்துத் திறனிற்கு மற்றுமொரு சாட்சி.

நாவலின் ஊடாக ஆங்காங்கே தெறிக்கும் சுஜாதா ஸ்பெஷல் வர்ணனைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ‘‘நீலச் சட்டைக்காரன் அன்னியனை ஒரு வஸ்துவைப் போல் பார்த்துக் கொண்டே நடந்தான்.’’ , ‘‘நகரத்தி்ல் கேட்டே அறியாத பட்சிகள் எல்லாம் ‘கல்யாணராமன்’ என்று அவனை எழுப்பின’’ ‘‘பெண் கிச் என்று நெருப்புக்குச்சி கிழித்தாற் போல் சிரித்தது எரிச்சலாக இருந்தது’’ என்று படிக்கிற பக்கங்களில் எல்லாம் ரசனையான வர்ணனைகளில் சிக்ஸர் அடித்திருப்பார் சுஜாதா. பொதுவாகவே சுஜாதாவின் எழுத்தில் ‘மிகவும்’ என்ற வார்த்தையின் பிரயோகம் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறேன் நான். இதிலும் ‘கல்யாணராமன் மிகவும் விரும்பினான்’ என்கிற வாக்கியம் நாவலில் பலமுறை கையாண்டிருப்பார்.

கிராமத்துப் பாடல்களை வியக்கிற ஒரு இளைஞனாக கதாநாயகனை அமைத்து, அந்த கேரக்டர் மூலமாக அழகான நாட்டுப் புறப் பாடல்கள் சிலவற்றைச் சொல்லி ரசனையைத் தூண்டுவார் நாவலின் துவக்கத்தில். ஒருபுறம் கிராமத்து ஜோடிகளான வெள்ளியின் மேல் கல்யாணராமனுக்கு உள்ள ஒருவிதமான இச்சையையும், மருதமுத்துவுக்கு சினேகலதாவின் மேல் இருக்கும் அதேரக இச்சையையும் விவரித்து உணர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவார். மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சனங்களில் இயல்புகளையும் போகிற போக்கில் விவரித்து தனியாக ரசனைக்குத் தீனி போடுவார். இன்னொரு புறம் ஜமீன் பங்களாவில் இரவில் கேட்கும் மர்ம சப்தங்கள், சினேகலதாவின் கொலை, அதைத் தொடரும் விசாரணைகள், இறுதியில் வெளியாகும் திடுக்கிடும் உண்மை என்று விறுவிறுப்புக்கு உத்தரவாதம் தந்திருப்பார். ஆக இந்தக் கதையை மூன்று பரிமாணங்களில் நாம் ரசிக்க முடியும்.

பின்னாளில் இந்த நாவல் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளியானது. பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, மனோரமா, தங்கவேலு போன்றவர்கள் நடித்திருந்தார்கள். திரைப்படமான சுஜாதாவின் கதைகளைப் பொறுத்தவரையில் மூலத்தில் அவர் எழுதியது நிறைய
மாற்றப்பட்டு கொத்துக்கறி போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கதையைப் பொறுத்தவரை கூடியவரை சுஜாதாவின் கதையை மாற்றாமலேயே படமாக்கியிருந்தார்கள். என்றாலும், (ஒருவேளை அதனால்தானோ) படம் பரபரப்பாக ஓடவில்லை. சுமாராகத்தான் ஓடியது. ‘காடெல்லாம் பிச்சிப்
பூ, கரையெல்லாம் செண்பகப் பூ, நாடெல்லாம் மணக்குதுல்ல அந்த நல்லமகன் போற பாதை’ என்று சுஜாதா எழுதிய நாட்டுப்பாடலைக் கூட இளையராஜா ட்யூனில் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். இப்பக் கேட்டாலும் நன்றாகவே இருக்கும்.

ஆனந்த விகடன் வார இதழில் இந்தத் தொடர்கதை வெளியான சமயத்தில் வாசக உலகில் பெரும் வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அப்போதைய ஆ.வி. ஆசிரியர் இந்தத் தொடர்கதை வெளியான சமயம் அடிக்கடி தொடர்பு கொணடு உற்சாகப்படுத்தியதையும், தொடர் முடிந்ததும் உடனடியாக இன்னொரு தொடர் எழுதுங்க என்று ‌சொன்னதையும் தன் ‘கற்றது்ம பெற்றதும்’ பகுதியில் பகிர்ந்து கொண்டிருந்தார் சுஜாதா. அத்தகைய வெகுமதிக்கும், பாராட்டுக்கும் முழுத் தகுதி பெற்ற இந்த நாவலை நீங்கள் இதுவரை படித்ததில்லை என்றால் உடன் படித்து ரசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

இந்தக் கதையின் சுருக்க வடிவினைப் படிக்க இங்கே க்ளிக் : கேப்ஸ்யூல் நாவல்-8
மேலும் வாசிக்க... "கரையெல்லாம் செண்பகப் பூ"

Tuesday, April 30, 2013

கத்தரித்தவை-10

ஜோக்குகளை வெளியிட்டு உங்களைச் சிரிச்சு ரசிக்க வெச்சு ரொம்ப நாளாச்சு! இந்த முறை ‘கல்கி’ இதழ்களில் 1960களில் ‘சாமா’ என்பவர் வரைந்த பழைய ஜோக்குகள் உங்களுக்காக அணிவகுக்கின்றன இங்கே...!





கீழே நான் கொடுத்திருக்கும் படத்தை இதய பலவீனம் உள்ளவர்களும் பெண்களும் பார்க்காதிருக்கக் கடவது என்று எச்சரிக்கிறேன்.
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
1961ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று தமிழின் புகழ்பெற்ற ‘தினததந்தி’ நாளிதழின் முதல் பக்கத்தி்ல் வெளியான தலைப்புச் செய்தி  இது!
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))
                                                                             )))))


ஹி... ஹி...!
மேலும் வாசிக்க... "கத்தரித்தவை-10"

Monday, April 22, 2013

பதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)


                                                         13. கடைசி அத்தியாயம்

றுநாள் காலை இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடம் நடந்த விஷயங்களையெல்லாம் கூறினார் துப்பறியும் பரஞ்சோதி. எல்லாவற்யையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கதிர்வேல், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நீங்கள் சொல்வதெல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன் பரஞ்சோதி. ஆனால் இப்பொழுது சுந்தர் எங்கே இருக்கிறான் என்று நீங்கள் கண்டுபிடித்தால்தான் நான் மேற்கொண்டு விசாரணையில் இறங்க முடியும்” என்றார்.

அவரிடம் மேற்கொண்டு பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்ட பரஞ்சோதி, அங்கிருந்து கிளம்பினார். தமயந்தி, சுந்தருக்குப் புகலிடம் அளித்திருக்கக் கூடுமென்று அவருக்குத் தோன்றியது. எனவே அன்றிரவு தமயந்தியின் ஜாகைக்குச் சென்று சோதனை இடுவதென்று முடிவு செய்தார். அவர் தனது ஜாகையை அடைந்த பொழுது அவருக்காக சுசீலாவும் அகல்யாவும் காத்துக் கொண்டிருந்தனர். முதல் நாளிரவு அகல்யா, சுசீலாவின் ஜாகையில் தங்கியிருந்தாள். அவர்கள் இருவரிடமும் தன் திட்டத்தைப் பற்றிக் கூறினார் பரஞ¢சோதி.

மயந்தியின் வீட்டு கம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதித்தார் பரஞ்சோதி. எங்கும் ஒரே நிசப்தமாக இருந்தது. மாடியில் ஒரு அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அந்த வீட்டிற்குள் எப்படி நுழைவதென்று சுற்றிலும் பார்த்தார் பரஞ்சோதி. அங்கே ஒரு பெரிய மாமரம் தன் கிளைகளைப் பரப்பியவாறு காட்சியளித்தது.  உடனே அதில் தாவி ஏறினார் பரஞ்சோதி, அதன் வழியாக விளக்கு வெளிச்சம் தெரிந்த ஜன்னலருகே நீண்டிருந்த கிளையில் ஊர்ந்து சென்றார். உள்ளே, கட்டிலில் படுத்தபடி ஏதோ பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான் சுந்தர்.

வேறொரு கிளைக்குத் தாவிய பரஞ்சோதி, ஒரு கம்பியில்லா ஜன்னலருகே ஊர்ந்து சென்று உள்ளே குதித்தார். அவர் குதித்த இடம் மோகன் கொலையுண்டிருந்த அறைதான். ஓசைப்படாமல் டெலிபோனருகே சென்ற பரஞ்சோதி, இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு டெலிபோன் செய்தார். பிறகு சுசீலாவுக்கு டெலிபோன் செய்து அகல்யாவைக் கூட்டி வரும்படிக¢ கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தார். அந்தச் சமயத்தில் யாரோ தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பரஞ்சோதி அவசரம் அவசரமாக வெளியே ஓடினார். சுந்தர் படுத்திருந்த அறை வாசலில் தமயந்தி தேம்பியபடி நின்றுகொண்டிருந்தாள்.

பரஞ்சோதியைக் கண்டதும், "நீங்கள்தான் அவரை கொன்றுவிட்டீர்கள்! நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு திருப்பி அழைத்துக் கொண்டு வந்த என் சுந்தரைக் கொன்று விட்டீர்களே! நீங்கள் டெலிபோனில் பேசியதைக் கேட்டுத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்" என்று சீறினாள்.

பரஞ்சோதி மௌனமாக சுந்தரின் பிணத்தையே பார்த்து கொண்டிருந்தார். அவர் மரத்தின் மேலிருந்து பார்த்தபோது சுந்தர் எப்படிப் படுத்திருந்தானோ அப்படியேதான் இப்பொழுதும் படுத்திருந்தான். அவன் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்று பரஞ்சோதிக்குப் புரியவில்லை.

சில நிமிஷங்களில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தனது போலீஸ் படையுடன் வந்து சேர்ந்தார். அவர் வந்த சில வினாடிகளுக்கெல்லாம் சுசீலாவும் அகல்யாவும் வந்து சேர்ந்தனர். "அகல்யா! நீ போய் அங்கே இறந்து கிடப்பது சுந்தர்தானா என்று பார்த்துச் சொல்" என்றார் பரஞ்சோதி.

"கூடாது! அவள் அங்கே போகக் கூடாது! என் சுந்தரை பார்க்க அவள் போகக் கூடாது. அவளை நிறுத்துங்கள்" என்று வீரிட்டாள் தமயந்தி. அவள் கை இப்பொழுது அவளது இடுப்பருகே சென்றது. அடுத்த வினாடி அவள் கையில் ஒரு துப்பாக்கி காட்சியளித்துக் கொண்டிருந்தது.

வினாடிகூடத் தாமதிக்காமல் பாய்ந்து அவள் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கினார் பரஞ்சோதி, அந்தப் போராட்டத்தில் வெடித்த குண்டு, அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் பாய்ந்து அதைத் தூள் தூளாக்கியது. "இவளைக் கைது செய்யுங்கள், இன்ஸ்பெக்டர்! இவள் தான் சுந்தரைக் கொலை செய்து விட்டாள்" என்றார் பரஞ்சோதி. அதேசமயம் இறந்து கிடந்த மனிதனின் அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்த அகல்யா, ‘‘மனோகர்! சுந்தர் இல்லை இது! இவன் மனோகர்!’’ என்று வீறிட்டலறினாள்.

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், பரஞ்சோதி, ராஜூ, அகல்யா, சுசீலா, தமயந்தி, மாணிக்கம் முதலியவர்கள் அமர்ந்திருந்தனர். தமயந்தி தலை கவிழ்ந்தவாறு அமர்ந்திருந்தாள். அகல்யா அழுது கொண்டிருந்தாள். பரஞசோதி பேச ஆரம்பித்தார்.

"கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருந்த சுந்தரைத் திருமணம் செய்து கொண்டிருநதாள் அகல்யா. அவர்கள் குடும்பம் மகிழ்ச்சிகரமாகவே நடந்து வந்தது. ஆனால் ஒரு சமயம் சென்னைக்குச் சுந்தர் சென்றிருந்தபோது தமயந்தியைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் அப்பொழுது சுந்தருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருப்பது தமயந்திக்கு தெரியாது.

பணக்காரியான தமயந்தியைத் திருமணம் செய்து கொண்டதும் கள்ளக் கடத்தல் பொருள்களை விற்பனை செய்வதை விட்டு விட்டு நல்லவனாக மாறிவிட வேண்டுமென்று துடித்தான் சுந்தர். ஆனால் அவன் நண்பர்களான பாஸ்கரும், மனோகரும் அவ்வாறு அவனை விடவில்லை. எனவே அவன் மீண்டும் தன் தொழிலில் இறங்கினான். அந்தச் சமயத்தில், சுந்தருக்கு முன்பே ஒரு மனைவி இருந்தது தமயந்திக்குத் தெரிந்து விட்டது. தன்னை சுந்தர் ஏமாற்றி விட்டதாகக் கொதித்துப் போயிருந்திருக்கிறாள். அதோடு ஒரு முறை அகல்யாவைச் சந்தித்து, சுந்தரை விவாகரத்து செய்து விடும்படியும் கூறி இருக்கிறாள். ஆனால், அதற்கு அகல்யா மறுத்து விட்டதாக மாணிக்கம் கூறினார்.

அதனால் வெறி கொண்ட தமயந்தி, சுந்தர் தனக்கும் இல்லாமல் அகல்யாவுக்கும் இல்லாமல் போகட்டுமென்று முடிவு செய்திருக்கிறாள். எனவே பாஸ்கரிடம் மூன்று லட்ச ரூபாய் கொடுத்து சுந்தரைக் கொன்று விடும்படி கூறி இருக்கிறாள். ஆனால் சுந்தரைக் கொல்ல பாஸ்கர் விரும்பவில்லை. எனவே சுந்தர் கடத்தப்பட்டு விட்டதாக ஒரு நாடகம் ஆடவேண்டுமென்று கூறி இருக்கிறான் பாஸ்கர். அதன் விளைவாக சுந்தரை பாழடைந்த மாளிகையின் சுரங்க அறையில் சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, மனோகர், சுந்தராக நடித்து எனக்கு டெலிபோன் செய்தான். நான் அதை நம்பினேன்.

எனக்கு மனோகர் டெலிபோன் செய்துகொண்டிருந்தபோது உள்ளே வந்துவிட்ட மோகன், மனோகரை மிரட்டி இருக்கிறான், அதைக் கண்ட மனோகர், அவனை உடனே சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டான். மனோகருக்கிருந்த மன பதைபதைப்பில் தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறி இருக்கிறான். அவற்றை எங்களிடம் கூறி விடுவதாக பவானி கூறிய பொழுதுதான், கடைப்பையன் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்து பாஸ்கருக்கு டெலிபோன் செய்து விட்டான். அதனால் தன் குட்டு வெளி வந்து விடுமே என்று பயந்த பாஸ்கர் பவானியைக் கொன்று விட்டான்.

ஒரு சமயம் என் உயிரை பாஸ்கரிடமிருந்து காப்பாற்றிய சங்கர் மீது எல்லா பழியும் விழ வேண்டுமென்று நினைத்த பாஸ்கர், அதற்கு வேண்டிய தடயங்களை சங்கரின் அறையில் வைத்தான். அதற்கு உடந்தையாக இருந்தாள் சந்தியா. ஆனால் அன்றிரவே அவளும் கொலை செய்யப்பட்டு விட்டாள்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்கள் சென்று சுந்தரைப் பார்த்தபொழுது அங்கு அவன் எலும்புகள்தான் இருந்தன. சுரங்கத்தில் குடியேறி இருந்த ராட்சஸ எலிகள் அவனைத் தின்று விட்டன. இந்தக் காட்சியைக் கண்டதும் வெலவெலத்துப் போனான் பாஸ்கர். இருந்தபோதிலும், தமயந்திக்கு டெலிபோன் செய்து வேலை முடிந்து விட்டதென்று கூறி, என்னை இந்த விவகாரத்திலிருந்து விலகி விடும்படிக் கூறி வற்புறுத்தி இருக்கிறான். அதன் விளைவாகத் தான் தமயந்தி எனது ஆபிசிற்கு வந்து ஒரு நாடகம் ஆடி இருக்கிறாள்.

இந்தச் சமயத்தில், மனோகரை சுந்தராக நடிக்கும்படி கூறி இருக்கிறாள் தமயந்தி. ஏனென்றால் திடீரென்று சுந்தர் என்னவானான் என்று யாராவது கேள்வி கேட்டால் தான் மாட்டிக் கொள்ளாமலிருக்க வேண்டுமென்று! அதோடு சுந்தரை யாருமே பார்த்ததில்லை.

ஏனென்றால் தமயந்தி அவனை ரகசியமாகத்தான் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டாள். அதற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களில் கார் டிரைவர் ஒருவன், மோகன் ஒருவன், மூன்றாவது நபர் மாணிக்கம்தான். கார் டிரைவர் ஒரு விபத்தில் இறந்து விட்டான். மோகனை மனோகர் கொலை செய்து விட்டான். மாணிக்கம் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவராதலால் அவரைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.

இந்தச் சமயத்தில் எனது குறுக்கீடு அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. எனவே பாஸ்கரிடம் சொல்லி என்னையும் ஒழித்துக் கட்டி விடும்படிக் கூறினாள். எனக்கு உதவி செய்த கட்டிடக் காவல்காரனான வேணுவையும் கொலை செய்து விட்டான் பாஸ்கர். என்னையும் கொண்டு போய் சுந்தரை அடைத்த அறையிலேயே அடைத்து விட்டான். ஆனால் அதைக் கவனித்த அகல்யா, என் காரியதரிசி சுசீலாவுக்கு டெலிபோன் செய்து விட்டாள். எனவே நானும் எலிகளுக்கு இரையாகாமல் தப்பினேன். அந்தச் சமயத்தில் தான் நான் அகல்யாவின் ஆட்களிடமும், சுசீலா பாஸ்கரிடமும் அகப்பட்டுக் கொண்டோம்.

அப்பொழுதுதான் நான் அகல்யாவை மீண்டும் சந்தித்து அவள் மூலம் பல தகவல்களைப் பெற்றேன். இதற்குள் பாஸ்கரின் ஆட்களுக்கும் அகல்யாவின் ஆட்களுக்கும் சண்டை ஏற்பட்டு எல்லோரும் மடிந்து விட்டனர். நானும் அகல்யாவும் தப்பி வரும்போதுதான் சுசீலாவை மீட்டோம். எங்களை முதல் நாள் துரத்தி வந்த எலிகளைத் தடுப்பதற்காக நாங்கள் பாஸ்கரின் கள்ளிப் பெட்டிகளைப் பயன்படுத்தி அந்த சுரங்க அறையின் வாயிலை மூடினோம். பாஸ்கர் அந்தக் கள்ளிப் பெட்டிகளை எடுக்கவே அதற்குப் பின்னாலிருந்த எலிகளெல்லாம் வெளியே வந்து பாஸ்கரையும் அவன் ஆட்களையும் அடித்துக் குதறித்தின்று விட்டன. சுசீலாவை அவன் தடுத்திருக்காவிட்டால், அவனும் அவன் கூட்டத்தினரும் உயிரோடு தப்பி இருக்கலாம்.

மறுநாள் காலை நான் வந்து உங்களிடம் சில விவரங்களை மட்டும் கூறினேன். இன்ஸ்பெக்டர். ஆனால் நீங்கள் சுந்தரைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறினீர்கள். எனக்கு சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டது அப்பொழுது தெரியாது. அகல்யா வந்து பிணத்தை அடையாளம் கூறியபொழுதுதான், நான் அங்கு நடந்திருந்த ஆள் மாறாட்டத்தைக் கண்டு பிடித்தேன்.

நான் தமயந்தியின் வீட்டிலிருந்து உங்களுக்கு டெலிபோன் செய்தபொழுது அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த தமயந்தி மனோகர் மனம் மாறி போலீஸ் தரப்பு சாட்சியாக மாறிவிடுவானோ என்று நினைத்து அவனைக் கொலை செய்து விட்டாள். அதைத் தற்கொலையாக மாற்றுவதற்கு அவள் முயன்றபோதிலும், மனோகரின் கையிலிருந்த செய்திதாளும் அவன் வாயிற்படியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததும், அது கொலையாக இருக்குமென்று எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் அவன் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவன் கையிலோ கீழேயோ துப்பாக்கிக் கிடந்திருக்கும். ஆனால் அங்கே துப்பாக்கியையே காணோம்.
 
அகல்யாவைச் சுட்டுக் கொல்ல தமயந்தி முயன்றபொழுது நான் அவள் கையிலிருந்து கைப்பற்றிய துப்பாக்கியிலிருந்து இரண்டு குண்டுகள் வெடிக்கப்ட்டிருந்தன. ஒன்று கண்ணாடியில் பாய்ந்ததை நீங்களே பார்த்தீர்கள். மற்றொன்று மனோகரின் பிரேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. தமயந்தி, மனோகரை சுட்ட உடனேயே நான் சென்றுவிட்டதால், துப்பாக்கியை அவள் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள். இல்லாவிட்டால் அவள் கொலை செய்ததை நாம் கண்டு பிடித்து இருக்க முடியாது. அகல்யா மனோகரை அடையாளம் கண்டுபிடித்து விடுவாள் என்றுதான் அவளைத் தடுக்க முயன்றாள் தமயந்தி, ஆனால் தமயந்தியின் திட்டம் இந்த இடத்தில் பலிக்கவில்லை. இதுதான் நடந்தது" என்று நிறுத்தினார் பரஞ்சோதி.

அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. அகல்யா விசும்பிக் கொண்டிருந்தாள். சுசீலா அவளைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். "சுந்தரின் போட்டோ ஏதாவது உன்னிடமிருக்கிறதா?" என்று தமயந்தியைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்.

"இல்லை" என்றாள் தமயந்தி.

"என்னிடமிருக்கிறது" என்று கூறிய அகல்யா, ஒரு புகைப்படத்தை எடுத்து கதிர்வேலிடம் கொடுத்தாள்.

அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட இளைஞனைக் கண்டதும் பிரமை தட்டிப் போய்விட்டார் கதிர்வேல். அந்த இளைஞனின் முகம் மிக அழகாக இருந்தது. அவனது சுருட்டை முடி, அவன் நெற்றியில் வந்து விழுந்திருந்தது. அவனது கண்கள், அறிவுக்களை வீசின. அவனை இரு பெண்களும் காதலித்ததில் வியப்பில்லை என்று அவருக்குத் தோன்றியது. அவனைக் கொலை செய்யச் சொல்லும் அளவுக்கு தமயந்திக்கு எப்படி மனம் வந்ததென்று இன்ஸ்பெக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு தமயந்தியின் மேல் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டனர்.

"என் கணவர் இன்னொருத்திக்கு உரியவர் என்று நினைத்ததும் என்னால் என் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை" என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினாள் தமயந்தி.

"அந்த ஆத்திரம் அகல்யாவுக்கு ஏற்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும்" என்றான் ராஜூ.

அந்த சமயத்தில் உள்ளே வந்த இரண்டு போலீஸ்காரர்கள் பாஸ்கர் கும்பலுடைய எலும்புகளையெல்லாம் கைப்பற்றி விட்டாதாகவும் அந்த எலிகளை ஒழிக்க ஆலோசனை நடப்பதாகவும் கூறினார்கள். எல்லோருடைய கவனமும், போலீஸ் கான்ஸ்டபிள்கள் கூறியவற்றில் லயித்திருந்தபோது, சட்டென்று தனது வைர மோதிரத்தைக் கடித்து விழுங்கி விட்டாள் தமயந்தி.

"தமயந்தி! என்ன காரியம் செய்து விட்டாய்?" என்று பதறினார் மாணிக்கம். சில நிமிஷங்களில் அவள் உயிர் பிரிந்தது.

                                                                 --- நிறைவு ---
மேலும் வாசிக்க... "பதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)"

Thursday, April 18, 2013

பதியைக் கொன்ற பாவை - 11, 12

                                             11. காட்டில் கண்ட கட்டழகி

ந்தப் பொறிக் கதவு இருந்தஇடத்தில் ஒரு வழி தோன்றியது. அங்கிருந்து குளிர்க் காற்றும் வெளிச்சமும் வந்தன. பரஞ்சோதி மெதுவாக அதன் வழியாக நடக்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து சுசீலாவும் சென்றாள். கொஞ்ச தூரம் சென்றதும், பாழடைந்த மாளிகையின் பின் பக்கம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது. அங்கு சிறிது தூரத்தில் ஒரு லாரியிலிருந்து சிலர் இறங்குவதைக் கண்டனர்.

‘‘அவர்கள் எல்லோரும் பாஸ்கரின் ஆட்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. நீ இங்கேயே பதுங்கிக் கொள் சுசீலா! நான் காட்டுப் பக்கம் ஓடப் போகிறேன். அந்த ஆட்கள் என்னைத் துரத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நீ சோலைப்பாக்கம் நோக்கி ஓடி, எப்படியாவது போலீசாருக்குத் தகவல் கொடுத்து விடு’’ என்று கூறி விட்டு சட்டென்று ஓட ஆரம்பித்தார். அந்த லாரியில் வந்த ஆட்கள் பரஞ்சோதியைப் பார்த்து விட்டனர். உடனே அவரைத் துரத்த ஆரம்பித்தனர். பரஞ்சோதி திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடிக் கொண்டிருந்தார்.

அவரைச் சுமார் ஐந்து பேர் துரத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் பரஞ்சோதியின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இருந்த போதிலும் அவரை விடாமல் துரத்தினர். பரஞ்சோதி மரங்களுக்கிடையில் புகுந்து புகுந்து வளைந்து ஓடிக் கொண்டிருந்தார். தன்னை இவர்கள் பிடிப்பதற்கு முன்னர் சுசீலா அந்த இடத்தை விட்டுத் தப்பி விட வேண்டுமென்று என்று விரும்பினார் பரஞ்சோதி. எனவே தன்னால் முயன்ற அளவு வேகமாக அங்கிருந்த மரங்களை வட்டமிட்டு ஓடினார்.

சுமார் அரை மணி நேரம் இவ்வாறு ஓடிய பரஞ்சோதி மிகவும் களைத்து விட்டார். மெதுவாகத் திரும்பிப் பார்த்தார். அவரைத் துரத்திய ஆட்களில் நான்கு பேரைக் காணவில்லை. ஒரே ஒருவன் மட்டும் ஓடிக் கொண்டிருந்தான். பரஞ்சோதியினால் தொடர்ந்து ஓட முடியவில்லை. முதல் நாளிரவு உணவும் அவர் சாப்பிடவில்லையாதலால் அவர் மிகவும் சோர்ந்து போயிருந்தார். எனவே தள்ளாடியபடி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார். இதற்குள் அந்த மனிதன் அவரை நெருங்கி விட்டான். அவனுக்கு மூச்சு வாங்கியது. அவரருகில் அவனும் அமர்ந்து விட்டான். சில வினாடிகள் இருவரும் ஒன்றும் பேசவில்லை.

வாட்டசாட்டமாக இருந்த அந்த மனிதன், தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட் பெட்டியை எடுத்து ஒரு சிகரெட்டை உருவிப் பற்ற வைத்துக் கொண்டான். பிறகு பரஞ்சோதிக்கும் ஒரு சிகரெட் கொடுத்தான். ‘‘எதற்காக இப்படி தலை தெறிக்க ஓடினாய்?’’ என்று கேட்டான் இந்த மனிதன்.

‘‘நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன் என்பதை பரீட்சை செய்து பார்த்துக் கொள்வதற்காகத்தான் ஓடினேன்’’ என்று புன்னகையோடு கூறிய பரஞ்சோதி, ‘‘நீ ஏன் என்னை துரத்தினாய்?’’ என்று கேட்டார்.

‘‘நீ ஏதோ திருட்டுக் காரியத்தில் இறங்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். அதனால்தான் உன்னைத் துரத்தினேன்’’ என்று கூறிய அந்த மனிதன், ‘‘வா, நாம் போகலாம்’’ என்று கூறியபடி எழுந்தான். பரஞ்சோதியும் அவனோடு எழுந்து நடந்தார். அதன் பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. கொஞ்ச தூரம் நடந்து சென்றதும், ஒரு பாறையின் இறக்கத்தில் ஒரு வீடு அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார் பரஞ்சோதி. அவரோடு வந்த அந்த மனிதன் அவரை அந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். இருவரும் உள்ளே நுழைந்த போது, ஒரு பெண் அவர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்று கொணடிருந்தாள். அவர்கள் காலடியோசயைக் கேட்டு சட்டென்று திரும்பினாள் அந்தக் கட்டழகி. அவளைக் கண்டதும்  பிரமை தட்டிப் போனார் பரஞ்சோதி.

                                                          12. பயங்கர முடிவு

‘‘பிரமை தட்டிப் போய்விட்டீர்களா, பரஞ்சோதி?” என்று ஒயிலாகக் கேட்டாள் அந்தப்  பெண்.

“உன்னை இந்த இடத்தில சந்திப்போனென்று நான் கனவு கூட காணவில்லை, அகல்யா” என்று கூற¤ய பரஞ்சோதி, “நீதான் சுசீலாவுக்கு டெலிபோன் செய்தாயா?” என்று கேட்டார்.

“ஆமாம்! உங்களை யாரோ ஒரு மனிதன் கொண்டு வந்து கையைக் கட்டி இழுத்துச் செல்வதைப் பார்த்தேன் . ஆனால் அந்த மனிதன் யாரென்று நான் சரியாகக்  கவனிக்கவில்லை” என்றாள் அகல்யா.

“அவன் தான் சுந்தர்!”

“என்ன? என் சுந்தரா?” என்று சட்டென்று கேட்டாள் அகல்யா.

“உன் சுந்தரா?” என்று வியப்போடு கேட்டார் பரஞ்சோதி.

“ஆமாம்” என்று எங்கோ பார்த்தபடி கூறிய அகல்யா, “அவர் என் கணவர்” என்றாள். “அவன் தான் தமயந்தியை மணந்து கொண்டிருக¢கிறானே?” என்று சந்தேகத்துடன் கேட்டார் அவர்.

“அவர் முதலில் என்னைத்தான் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஒருசமயம் சென்னைக்குச் சென்றிருந்தபோது தமயந்தியைப் பார்த்துக் காதல் கொண்டார். அவளும் அவரை விரும்பியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முதல் மனைவி நான் இருக்கும்பொழுது அவர் இரண்டாந் திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாதென்றபோதிலும், அவர் மகிழச்சியில் அக்கறை கொண்ட நான், அவருக்காக விட்டுக் கொடுத்தேன். இருந்தபோதிலும் அவர் என்னை வந்து சந்தித்துக் கொண்டுதானிருந்தார். அன்றிரவு நான் உங்களைச் சந்தித்த பொழுதும் அவர் என்னை வரச் சொல்ல இருந்ததின் பேரில்தான் நான் அங்கு வந்தேன். ஆனால் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது” என்று நிறுத்தினாள் அகல்யா.

“சுந்தர் கள்ளக் கடத்தல் செய்பவனென்று உனக¢குத் தெரியுமா?”

“தெரியும்! ஆனால் அவருக்கும் தமயந்திக்கும் திருமணமான பிறகு அவர் அநத்த் தொழிலிலிருந்து விலகிவிட எண்ணினார். ஆனால் பாஸ்கருக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. எனவே அடிக்கடி சுந்தருடன் அவனுக்குத் தகராறு ஏற்பட்டது. இருந்தபோதிலும் இருவரும் பிறகு ஒற்றுமையாகி விட்டார்கள்” என்றாள் அகல்யா. பிறகு, இதுவரை அங்கே ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த, பரஞ்சோதியோடு வந்த மனிதனை நோக்கி, “ராஜவேல்! பாஸ்கர் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானென்று நமது ஆட்களை விட்டுக் கவனிக்கச் சொல்” என்று கூறிய அகல்யா, “இவர் எந்த திசையில் ஓடிக் கொண்டிருந்தார்?” என்று கேட்டாள்.

“காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருந்தார்,”

“இவரோடு வேறுயாராவது இருந்தனரா?”

“இல்லை!”

“உன்னிடமிருந்து இவர் தப்ப வேண்டுமென்று எண்ணியிருந்தால் இவர் சோலைப்பாக்கம் நோக்கி ஓடாமல் எதற்காக காட்டை நோக்கி ஓடினார்?”

“அதுதான் எனக்கும் தெரியவில்லை” என்று ஒப்புக¢ கொண்டான் ராஜவேல். “அவரோடு இருந்த வேறு யாரோ தப்பிச் செல்வதற்காகத்தான் இவர் உங்களுக்கெல்லாம் போக்குக் காட்டியபடி காட்டை நோக்கி ஒடி இருக்கிறார்” என்று கூறிய அகல்யா, பரஞ்சோதியின் பக்கம் திரும்பி, “அப்படித்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்” என்றார் பரஞ்சோதி. அந்தச் சமயத்தில் வேகமாக ஒரு மனிதன் உள்ளே வந்தான். “என்ன விஷயம், பவானந்தம்?” என்று கேட்டாள் அகல்யா.

“நம் வீட்டைச் சுற்றிலும் பாஸ்கரின் ஆட்கள் இருக்கிறார்கள்! எல்லோரும் துப்பாக்கிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான் பவானந்தம். “நமது ஆட்களை மறைந்திருந்து அவர்களது முன்னேற்றத்தைக் கண்காணிக்கச் சொல்” என்ற அகல்யா வேகமாக உள் அறையை நோக்கி நடந்தாள். சில நிமிஷங்களில் அவள் திரும்பி வந்தபொழுது அவள் கையில் ஒரு டிரே இருந்தது. அதில் பிஸ்கட்டுகளும். ரொட்டிகளும், சர்க்கரையும், ஒரு கோப்பை தேநீரும் இருந்தன அவற்றை மேஜை மீது வைத்த அகல்யா பரஞ்சோதியைச் சாப்பிடும்படி கூறினாள். ரொம்பப் பசியோடு இருந்த பரஞ்சோதி அவற்றை சாப்பிட்டு முடித்தார். அதற்குள் அவரது துப்பாக்கியில் குறைந்திருந்த குண்டுகளைப் போட்டு நிரப்பினாள்.

ந்தச் சமயத்தில் உள்ளே வந்த ராஜவேல், “அவர்கள் நம் ஆட்களை நோக்கிச் சுடுகிறார்கள். நம்மிடம் இருக்கும் சொற்ப ஆட்களை வைத்துக் கொண்டு அவர்களைச் சமாளிப்பது கஷ்டம் அதனால் நீங்கள் இருவரும் எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று விடுங்கள்” என்றான். ‘‘அது முடியாத காரியம் ராஜவேல்!” என்று கூறிய அகல்யா “நானும் வருகிறேன். நாம் எப்படியும் சமாளித்து விடலாம்” என்றாள். அதற்குள் பரஞ்சோதி அவசர அவசரமாகக் கதவருகே சென்று நிலவரம் எப்படி இருக்கிறதென்று பார்த்தார். வெளியே சுமார் பதினைந்து பேர் புதர்களின் மறைவில் அமர்ந்தபடி வீட்டையே கண்காணித்துக் கொண்டிருந்தனர்
.
எங்கிருந்து சுட்டால் அவர்களை முறியடிக்க முடியுமென்பதை அறிந்த பரஞ்சோதி, அகல்யாவின் ஆட்களை ஒவ்வொரு இடத்தில் உட்கார வைத்து, எந்தத் திசையில் சுடவேண்டுமென்பதையும் கூறினார். பிறகு அந்த வீட்டின் ஜன்னல் ஒன்றின் வழியாக வெளியே சுட்டார். அதைத் தொடர்ந்து பயங்கரமான பல துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. இருதரப்பு ஆட்களும் மாறி மாறி சுட்டனர். சிலர் பயங்கரமாக ஒலமிட்டு அலறித் துடித்த சத்தமும் கேட்டது. பரஞ்சோதி, அகல்யா இருந்த இடத்திற்கு வேகமாக ஓடி வந்து, “நீ உன் உடமைகளையெல்லாம் ஒரு சிறு பெட்டியில் அடைத்துக¢ கொள், அகல்யா! நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும்” என்றார்.

உடனே அகல்யா உள் அறையை நோக்கி ஒடினாள். சில நிமிஷங்களில் தனது பொருள்களையெல்லாம் ஒரு பெட்டியில் வைத்து அடைத்துக் கொண்டு வெளியே எடுத்து வந்தாள். அதற்குள் வெளியே எல்லா சத்தமும் ஓய்ந்து விட்டிருந்தது. வெளியே வந்து எட்டிப் பார்த்தார் பரஞ்சோதி. அகல்யாவின் ஆட்கள் எல்லோருமே இறந்து விட்டிருந்தார்கள். பாஸ்கரின் ஆட்களில் பலர் இறந்து விட்டனர். சிலர் குற்றுயிராய்க் கிடந்தனர். அவர்களைச் சோதித்துப் பார்த்தார் பரஞ்சோதி. அவர்களுக்குச் சிகிச்சை செய்தாலும் அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பது தெரிந்துவிட்டது.

அங்கிருந்து அகல்யாவை அழைத்துக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் பரஞ்சோதி. கொஞ்ச தூரம் சென்றதும் கீழே ஏதோ வெளிச்சம் தெரிவதைப் பார்த்தார். அவர்கள் இருவரும் இன்னும் கொஞ்ச தூரம் நெருங்கியதும் கீழே காஸ் லைட்களை வைத்துக் கொண்டு பாஸ்கர் தனது ஆட்களை விட்டு கள்ளிப் பெட்டிகளைக் கொண்டு வருவதைப் பார்த்தார். அவர்களுக்கு சில கஜ தூரத்தில் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது.  “லாரியிலிருந்து யாரோ ஒரு பெண்ணின் புடவை பறக்கிறது” என்றாள் அகல்யா.

“அடக்கடவுளே! அது சுசீலாதான்!” என்று கூறிய பரஞ்சோதி, “நீ இங்கேயே இரு. நான் போய் அவளைக் கூட்டி வருகிறேன்” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக்கூட காத்திராமல் வேகமாக லாரியை நோக்கிச் சென்றார். யாரோ வரும் அரவம் கேட்டு சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் வாயில் ஒரு துணிப்பந்து திணிக்கப்பட்டிருந்தது வேகமாக அவளருகே சென்ற பரஞ்சோதி அவள் வாயிலிருந்து துணிப்பந்தை எடுத¢து வெளியே எறிந்துவிட்டு, அவள் கைகளையும் கால்களையும் பிணித்திருந்த கயிறுகளையும் அவிழ்த்து விட்டு தானும் கீழே குதித்தார். பிறகு இருவரும் அகல்யா இருந¢த இடத்துக்குச் சென்றனர். அகல்யாவையும், சுசீலாவையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“நீ எப்படி இவர்களிடம் அகப்பட்டுக் கொண்டாய் சுசீலா?” என்று கேட்டார் பரஞ்சோதி. “நான் போகும்போது வழியில் பாஸ்கரின் ஆட்கள் என்னை பார்த்து விட்டனர். உடனே என்னைப் பிடித்துக் கட்டி வைத்து விட்டனர்.” என்றாள். அந்தச் சமயத்தில் ஏதோ சத்தம் கேட்டது. உடனே மூவரும் திரும்பி, தங்களுக்கு ஐம்பது கஜ தூரத்தில் கீழே என்ன நடக்கிறதென்று பார்த்தனர்.  அங்கே, சுரங்கப் பாதையிலிருந்து சில ஆட்கள் பயங்கரமாகக் கத்தியபடி வெளியே ஓடி வந்தனர். சிலரின் உடலில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அவர்களையெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தான் பாஸ்கர். ஆனால் அதே சமயத்தில ஆயிரக்கணக்கில் ராட்சஸ எலிகள் வெளியே ஓடிவந்து பாஸ்கரின் கும்பலைச் சூழ்ந்து கொண்டது. அவைகளிடமிருந்து யாருமே தப்பிக்க முடியவில்லை. சில வினாடிகளில் அவர்கள் எல்லோரையும் கீழே தள்ளிக் குதற ஆரம்பித்தன அந்த வெறி கொண்ட எலிகள்.

தங்களையும் மீறி அலறிவிடாமலிருக்க அகல்யாவும் சுசீலாவும் தங்கள் புடவைத் தலைப்பைச் சுருட்டித் தங்கள் வாயை மூடிக் கொண்டனர். பரஞ¢சோதிக்கு அந்தக் காட்சியைக் காண சகிக்கவில்லை. “சீக்கிரம் கிளம்புங்கள். அவை இங்கும் வந்துவிடும்” என்று கூறியபடி அகல்யாவின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தார் பரஞ்சோதி. சுசீலாவும் அகல்யாவும் அவரைப் பின் தொடர்ந்தனர். பாஸ்கரின் கூட்டத்தினர் எழுப்பிய மரண ஓலம் அந்தப் பகுதி எங்கும் எதிரொலித்தது.

                             -‘திடுக்’ க்ளைமாக்சுடன் அடுத்த பகுதியில் முடிகிறது...!
மேலும் வாசிக்க... "பதியைக் கொன்ற பாவை - 11, 12"

Monday, April 15, 2013

பதியைக் கொன்ற பாவை - 10

                                      10. மர்மப் பெண்ணின் எச்சரிக்கை

அந்தப் பயங்கரச் சூழ்நிலையில் சுசீலாவின் குரல் ஒலித்தது பரஞ்சோதிக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. ‘‘நான், கீழே பாதாள அறையில் இருக்கிறேன்’’  என்று தன் பலங்கொண்ட மட்டும் கூச்சலிட்டார் பரஞ்சோதி. அதைத் தொடர்ந்து எங்கோ கல் உருளும் ஓசை கேட்டது. சுசீலா வருவதற்கு உதவியாளர் தனது டார்ச் விளக்கைப் பொருத்தி வைத்தார் அவர். அந்த ஒளியைக் கண்டு அஞ்சிய எலிகள் ஓடி விட்டன.

சில வினாடிகளில் வேறொரு டார்ச் விளக்கின் ஒளி அந்தப் பாதாள அறையின் வாயிலில்தோன்றியது. ‘‘பரஞ்சோதி! எங்கே இருக்கிறீர்கள்?’’ என்ற சுசீலாவின் குரலும் அதைத் தொடர்ந்து ஒலித்தது. ‘‘இங்கேதான் இருக்கிறேன். சுசீலா! சீக்கிரம் வா’’ என்று அவசரத்தோடும், அச்சத்தோடும் பரஞ்சோதியின் குரல் ஒலித்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த எலிகள் வந்துவிட்டால் சுசீலாவையும் அவை பிடித்துக் கொண்டு விடுமே என்று அவருக்குப் பயமாக இருந்தது. இதற்குள் அவரருகே வந்த சுசீலா ‘‘இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், பரஞ்சோதி!’’ என்று கேட்டவள், அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் பதறியவளாக, ‘‘அடக் கடவுளே, என்ன இது?’’ என்று கேட்டவாறு அந்தச் சங்கிலியைக் கழற்ற முடியுமா என்று பார்த்தாள்.

‘‘உன்னிடம் கைத்துப்பாக்கி இருக்கிறதா, சுசீலா?’’ என்று கேட்டார் பரஞ்சோதி.

தனது கைப்பையிலிருந்து ஒரு சிறிய கைத்துப்பாக்கியை எடுத்து அவரிடம் கொடுத்தாள் சுசீலா. அதன் உதவியால் சங்கிலியைத் தகர்க்க முடியுமா என்று பார்த்தார் பரஞ்சோதி. அந்தச் சங்கிலியின் அருகே பிணைக்கப்பட்டிருந்த பூட்டில் ஒரு முறை சுட்டார். ஆனால் அது ஒன்றும் ஆகவில்லை. அந்தச் சிறிய அறையில் அவர் சுட்டதினால் மகா பயங்கரமான சத்தம் எழுந்தது. அந்த அதிர்ச்சியில் மனோகரின் எலும்புகள் சரிந்தன. மீண்டும் ஒருமுறை பரஞ்சோதி சுட்டதும் அந்தப் பூட்டு உடைந்து விழுந்தது. இப்பொழுது ஏற்பட்ட அதிர்ச்சியில் மனோகரின் எலும்புகள் மேலும் சரிந்தன.

அந்தச் சத்தத்தைக் கேட்ட சுசீலா தனது டார்ச் விளக்கின் ஒலியை அந்தத் திசையில் பாய்ச்சினாள். அந்த இடத்தில் கிடந்த மனித எலும்பினைக் கண்டதும் பயத்தால் வீரிட்டவளாய் பரஞ்சோதியின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். உடல் வெடவெடவென நடுங்கியது. ஆதரவோடு அவள் கரத்தைப் பற்றிய பரஞ்சோதி, ‘‘நாம் இப்பொழுது கூடிய விரைவில் இந்த இடத்தை விட்டு வெளியே சென்று விட வேண்டும். சீக்கிரம் வா’’ என்று கூறியபடி அவளை அழைத்துக் கொண்டு, சுந்தர் சென்ற வழியாக அழைத்துச் சென்றார்.
ஆனால் சிறிது தூரம் சென்றதும் அந்த வழி முடிந்து விட்டது. அதைக் கண்டதும் அவருக்கு ரொம்ப ஆச்சரியமாகப் போய் விட்டது. இருந்த போதிலும் வேறொரு வழியாக நடக்க ஆரம்பித்தார்.

அது எங்கேயோ வளைந்து வளைந்து சென்றது. ஆனால் வெளியே செல்வதற்கு மட்டும் வழி கிட்டவில்லை. வெகு நேரம் வரை இருவரும் அங்கிருந்த சுரங்கப் பாதைகளில் அலைந்து அலைந்து களைப்படைந்து விட்டனர். இருந்த போதிலும் எந்த வழியாக வெளியே செல்வதென்பது இருவருக்கும் தெரியவில்லை.

‘‘என்னால் இனி ஒரு அடி கூட நகர முடியாது’’ என்று கூறியவாறு தள்ளாளடிய சுசீலா, அப்படியே கீழே உட்கார்ந்து விட்டாள்.
பரஞ்சோதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருக்கும் கால்கள் ரொம்ப வலித்தன. தன்னோடு சேர்ந்து சுசீலாவும் இங்கே வந்து மாட்டிக் கொண்டாளே என்று அவருக்கு மிகவும் சஙகடமாக இருந்தது. அவரது டார்ச் விளக்கு அணைந்து போய்விட்டது. சுசீலாவின் டார்ச்சும் மங்கிக் கொண்டே வந்தது. அந்தச் சுரங்கப்பாதை முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. எந்த நேரத்திலும் அந்த எலிகள் இங்கே வரக் கூடுமென்ற அச்சம் பரஞ்சோதிக்கு ஏற்பட்டது.

சுசீலா கொண்டு வந்த கைத்துப்பாக்கியில் இன்னும் நான்கு தோட்டாக்கள் தான் இருந்தன. நிறைய எலிகள் வந்து விட்டால் சுசீலாவையும் வைத்துக் கொண்டு சமாளிப்பது கஷ்டமென அவருக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் பல எலிகள் கூச்சலிட்டுக் கொண்டு வரும் சத்தம் கேட்டது.

கதி கலங்கிப் போன பரஞ்சோதி ‘‘சுசீலாவின் கையைப் பிடித்து இழுத்தபடி ‘‘ஆபத்து சீக்கிரம் ஓடி வா’’ என்று கூறி ஓட ஆரம்பித்தார்.
அவர் குரலில் ஒலித்த கலவரத்தைக் கண்ட சுசீலா அச்சத்தோடு அவரைப் பின் தொடர்ந்து ஓடினாள். சிறிது தூரம் சென்றதும் ஒரு மேடான இடம் காட்சியளித்தது. தரையிலிருந்து இரண்டடி உயரத்திலிருந்த அந்த மேடையின் மீது ஏறிய பரஞ்சோதி, சுசீலாவும் அதன் மீது ஏற உதவி செய்வதவராய் திரும்பி, தாங்கள் ஓடி வந்த சுரங்கப்பாதையைப் பார்த்தார்.

சிறிது தூரத்தில் நூற்றுக்கணக்கான எலிகள் கூச்சலிட்டபடி வந்து கொண்டிருந்தன. அவற்றைக் கண்டதும் சுசீலா வீரிட்டாள். மயங்கி விழுந்து விடாமலிருக்க அவள் வெகுவாக சமாளிக்க வேண்டி இருந்தது. ‘‘சீக்கிரம் வா, சுசீலா!’’ அவை நம்மைக் கடித்துக் குதறி விடும்’’ என்று கூறியபடி அவள் கரத்தைப் பிடித்து இழுத்தபடி ஓட ஆரம்பித்தார்.

அந்த இடம் ஒரு அறையைப் போலிருந்தது. அதனுள் பல கள்ளிப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கே சில எலிகள் ஓடி வந்து கொண்டிருந்தன. உடனே தனது துப்பாக்கியால் ஒரு எலியை நோக்கிச் சுட்டார் பரஞ்சோதி. உடனே அந்த எலி பயங்கரமாக அலறிக் கொண்டு தரையில் உருண்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி மற்ற எலிகள் பயந்து பின் வாங்கவில்லை. அதற்கும் மாறாக அவை இன்னும் வேகமாக பரஞ்சோதியை நோக்கி ஓடி வந்தன.

ஒரு கணம் என்ன செய்வதென்று பரஞ்சோத¤க்குத் தெரியவில்லை. பிறகு சட்டென்று அந்த அறையின் உட்புறம் திரும்பி, அங்கிருந்த கள்ளிப் பெட்டிகளை அந்த அறையின் வாசலை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார். சுசீலாவும் அவரோடு சேர்ந்து அவற்றை நகர்த்தினாள்.
திடீரென்று வீரிட்டாள் சுசீலா. சட்டென்று திரும்பினார் பரஞ்சோதி. அங்கே, சுசீலாவின் புடவை முந்தானையில் ஒரு எலி தொற்றி ஏறிக் கொண்டிருந்தது. வேகமாக அவளருகே ஓடி அந்த எலியைப் பிடித்திழுத்து வெளியில் வீசியெறிந்தார் பரஞ்சோதி.

பிறகு மீண்டும் கள்ளிப் பெட்டிகளை நகர்த்த ஆரம்பித்தார். இன்னும் ஒரு சிறிய ஓட்டைதான் இருந்தது. அதை அடைக்க அவர் ஒரு கள்ளிப் பெட்டியை இழுத்துக் கொண்டு போனபோது ஒரு எலி உள்ளே பாய்ந்து அவர் கையைக் கடித்து விட்டது. மிகச் சிரமப்பட்டு அந்த எலியைப் பிடித்து வெளியே வீசிய பரஞ்சோதி, கடைசிப் பெட்டியையும் வைத்து அந்த வாசலை அடைத்து விட்டார். சுசீலா தனது புடவைத் தலைப்பிலிருந்து ஒரு துண்டு கிழித்து பரஞ்சோதியின் கையில் கட்டுப் போட்டாள். இருவரும் ரொம்பக் களைத்துப் போயிருந்தனர். எனவே கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் ஓய்வெடுத்துக் கொண்டனர்.

எப்படி அந்த அறையிலிருந்து தப்பப் போகிறோமோ என்று யோசனை செய்து கொண்டிருந்தார் பரஞ்சோதி. பிறகு எழுந்து ஒரு கள்ளிப் பெட்டியைத் திறந்து பார்த்தார். அதற்குள் பல வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்தன. பாஸ்கரின் கள்ளக் கடத்தல் பொருள்கள் இந்த அறையில் தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொண்டார் அவர்.

‘‘நான் இங்கே இருப்பதாக உனக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?’’ என்று கேட்டார் பரஞ்சோதி.

‘‘உங்களை வெகு நேரமாகியும் காணவில்லையே என்று நான் என் வீட்டிற்குப் போகலாம் என்று கிளம்பும் போது டெலிபோன் அடித்தது. தங்கள்தான் பேசுகிறீர்களோ என்று ஆவலோடு வந்து எடுத்தேன். ஆனால் யாரோ ஒரு பெண் பேசினாள். துப்பாக்கி டார்ச் முதலியவைகளை எடுத்துக் கொண்டு உடனே நான் ஊர் எல்லையிலிருக்கும் பாழடைந்த மாளிகைக்கு வந்தால் உங்களை உயிரோடு பார்க்க முடியுமென்றும், நான் தாமதப்படுத்தும் ஒவ்வொரு விநாடியும் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று கூறினாள். அவள் யாரென்று நான் கேட்டதற்கு, அதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அநாவசியம் என்று கூறி டெலிபோனை  வைத்து விட்டாள். நான் உடனே இங்கே புறப்பட்டு வந்தேன்.’’

‘‘நீ காரில் வந்தாயா?’’

‘‘இல்லை, அந்தப் பெண், என்னைக் காரில் வரக்கூடாதென்றும், ஒரு வாடகைக் காரில் வர வேண்டுமென்றும் கண்டிப்பாகக் கூறினாள். அதனால் நான் வாடகை காரில் வந்தேன். நான் வந்து வெகு நேரம் உங்களைத் தேடினேன். பிறகுதான் தங்கள் கூச்சலிட்ட சத்தம் கேட்டதும் உங்களைக் கண்டு பிடித்தேன்.’’ என்று கூறினாள்.

பிறகு அவளே தொடர்ந்து, ‘‘வெகு நேரம் நான் அங்கே தேடினேன். பிறகு யாராவது என்னை ஏமாற்றுவதற்கு இம்மாதிரி கதையளந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு ழுந்தது. இனி உங்களைத் தேடிப் பிரயோஜனமில்லை என்று நான் முடிவு கட்டிக் கொண்டு கிளம்பின சமயத்தில்தான் உங்கள் குரலைக் கேட்டேன். நீங்கள் மட்டும் கூச்சல் போடாமலிருந்தால் நான் திரும்பிப் போயிருப்பேன்’’ என்றாள்.

‘‘நீ அப்படித் திரும்பிப் போயிருந்தால் நானும் நீ அங்கு பார்த்தாயே, எலும்புக் குவியல்... அதைப் போல எலும்பாக இருப்பேன்!’’

‘‘என்ன?’’

‘‘ஆமாம். ‘மனோகர்அன் கோவி’ன் உரிமையாளனான மனோகர்தான் அங்கே எலும்புக் கூடாகக் கிடக்கிறான். நம்மைத் துரத்திய எலிகள்தான் அவனை அம்மாதிரி மாற்றி விட்டன.’’

‘‘நாம் இங்கிருந்து எப்படித் தப்புவது?’’ என்று திகிலோடு கேட்டாள் சுசீலா.

‘‘இந்த அறை பாஸ்கரின் கள்ளக் கடத்தல் பொருள்களைச் சேமித்து வைக்கும் அறையாகும். நாம் வந்த வழயில் இந்தப் பெட்டிகளைக் கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம். அதனால் இதற்கு வேறு எங்காவது ஒரு வாசல் இருக்க வேண்டும்’’ என்று கூறியபடி எழுந்தார் பரஞ்சோதி.

அந்த அறைக்கு வெளியே எலிகள் பயங்கர ஓசைகளை எழுப்பியவாறிருந்தன. அந்த அறையின் சுவற்றைத் தடவிப் பார்த்தும் தட்டிப் பார்த்தும் ஏதாவது பொறிக் கதவு இருக்கிறதா என்று பார்த்தார் பரஞ்சோதி. அவர் கையில் எலி கடித்த இடம் அவருக்கும் பயங்கர வலியை ஏற்படுத்தியது.

ஒரு இடத்தில் ஒரு இரும்பு வளையம் காட்சி அளித்தது. அதைப் பிடித்துத் தன் பலங்கொண்ட மட்டும் இழுத்தார் அவர். அந்த இடம் திறந்து கொண்டது.

                                                                                                       -இன்னும் வரும்....!

மேலும் வாசிக்க... "பதியைக் கொன்ற பாவை - 10"

Friday, April 12, 2013

பதியைக் கொன்ற பாவை - 9

 பகிர்வதற்கு ஜோக்குகள், ரசித்த படங்கள், மற்றுமொரு ஓஹென்றியின் படக்கதை என நிறைய விஷயங்கள் இருப்பினும், தொடர்கதை விட்டு விட்டுப் போடுவதால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய வாய்ப்புண்டு என்பதை உணர்வதால் எஞ்சிய நான்கு அத்தியாயங்களையும் தொடர்ந்து வெளியிட்டு இந்த ‘பதியைக் கொன்ற பாவை’யை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன். சரிதானே...! ஆகவே இனி தொடர்ந்து க்ளைமாக்ஸ் வரை போய்விடலாம்!

                                     9.பரஞ்சோதியை எதிர்கொண்ட பயங்கரம்

சில வினாடிகள் அந்த நெருப்புக் கோளங்களையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் பரஞ்சோதி. அவருக்கு சந்தர் கூறியது நினைவிற்கு வந்தது. ஏதோ மிருகம் மனோகரைத் தின்று விட்டதென்று, அவர் உடல் சிலிர்த்தது. அந்த நெருப்புக் கோளங்கள் சிறிது சிறிதாக பெரிதாகிக் கொண்டே வந்தன.

சட்டென்று தனது டார்ச் விளக்கை அந்தத் திசையில் ஒளியைப் பாய்ச்சுமாறு செய்தார் பரஞ்சோதி, ஆனால் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்து விட்டன. அது என்னவாக இருக்குமென்ற சிந்தனையில் ஆழ்ந்தார் பரஞ்சோதி. சில வினாடிகளில் வேறொரு திசையில் அந்த நெருப்புக் கோளங்கள் தோன்றின. பிறகு மீண்டும் மறைந்து அவர் கால் அருகே காட்சியளித்தது. டார்ச் விளக்கின் ஒளியில் அதைப் பார்த்த பரஞ்சோதி பிரமை தட்டிப் போய் விட்டார்.

மூன்றடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ராட்சஸ எலிதான் அது! அதை பரஞ்சோதி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அது அவர் குரல் வளையை நோக்கிப் பாய்ந்தது. பரஞ்சோதி அதைப் பிடித்துத் தள்ளப் பார்த்தார். அந்த எலியின் குறி தவறியதினால் அவரது ஷர்ட்காலரை தனது கூரிய பற்களால் கவ்வி இழுத்தது. கொஞ்சம் பரஞ்சோதி அசட்டையாக இருந்திருந்தால் அவர் குரல் வளையில் கடித்துக் குதறி இருக்கும். தன் பலங்காண்ட மட்டும் அதை அறைந்தும், குத்தியும் பார்த்தார். ஆனால் அதனாலெல்லாம் அது பயந்து ஒடுவதாகத் தெரியவில்லை. அருகே கிடந்த சில கற்களை எடுத்து அதன்மீது வீசினார் பரஞ்சோதி.

அதன் பிறகு அந்த எலி எங்கே போயிற்றென்று அவருக்குத் தெரியவில்லை. அவரது டார்ச்சும் மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது அணைந்து விடுமென்று புரிந்து கொண்டார் அவர். அங்கிருந்து தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி மிகவும் வலுவுள்ளதாகத் தோன்றியது. அங்கே கிடந்த கற்கள் மிகவும் சிறியவை. எனவே அவற்றால் அந்தச் சங்கிலியை தகர்க்க முடியாதென்று அவருக்குத் தெரியும். அதனால் வேறு ஏதாவது மார்க்கம் இருக்கிறதா என்று பார்த்தார். வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

இன்னும் எத்தனை எலிகள் அங்கே இருக்கின்றனவோ என்று வியந்தார் பரஞ¢சோதி. அவை ஒன்று திரண்டு வந்தால் தன்னால் சமாளிக்க முடியுமா என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. கட்டப்பட்ட இந்த நிலையில் தன்னால் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக¢க முடியும் என்று யோசித்தார். தன்னை இம்மாதிரி கட்டிப் போட்டதற்குப் பதிலாக தன்னைக் கொலை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. தான் இந்தப் பயங்கர எலியினால் கடிபட்டு, சித்ரவதைக்கு ஆளாகி சாக வேண்டுமென்றுதான் பாஸ்கர் விரும்பி இருக்கிறான்.

அவருக்கு உடனே மனோகரின் நினைவு வந்தது. பாவம்! அவன் எவ்வளவு சித்ரவதைகளை அனுபவித்திருப்பான். உயிரோடும், உணர்ச்சியோடும் இருக்கும்பொழுது இவ்வாறு எலிகள் ஒரு மனிதனைக் கடித்துக் குதறினால் அவனுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! இத்தகைய தண்டனையைப் பெற அவன் என்ன குற்றம் செய்திருப்பானென்று யூகிக்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. சுசீலாவிடமாவது, தான் எங்கே போகிறோமென்பதைக் கூறி விட்டு வந்திருந்தால் ஒருக்கால் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதென்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணம் அவளால் என்ன உதவி செய்திருக்க முடியுமென்றும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். .

தனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் எலியினால் தொந்தரவு ஏற்படுமென்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இருந்தபோதிலும் அவர் இருந்த நிலையில் சிந்தனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அவருக்குத் திடீரென்று சந்தியாவின் நினைவு வந்தது. அன்று காலை தினசரியில் அவளைப் பற்றிய செய்தி வந்திருந்தது. ஆனால் அவளைக் கொலை செய்தது யாராக இருக்குமென்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதில் காணப்பட்டது. பவானியின் பிரேதமும் கண்டுபிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடிய விரைவில் இரண்டு கொலைகளையும் செய்த நபரையோ, நபர்களையோ கண்டுபிடித்து விடுவதாகவும் போலீசார் உறுதி அளித்திருந்தனர். சந்தியாவின் பிணத்தையும், பவானியின் பிணத்தையும் கண்டுபிடித்த போலீசார் இன்னும் கொஞ்ச நேரத்தில் வேணுவின் பிணத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இங்கு கொண்டு வந்து அடைக¢கப்பட்ட மனோகரைப் பற்றிப் போலீசாருக்குத் தெரியாது. தன்னையும் போலீசாரால் கண்டுபிடிக¢க முடியாது. நல்ல இடமாகத்தான் தேர்ந்தெடுத்துத் தன்னை அடைத்திருக்கிறார்கள் என்று நினைத்தார்.

அவர் கட்டளைப்படி தமயந்தியின் ஜாகையை ராஜு இப்பொழுது கண்காணித்துக் கொண்டிருப்பான். சுசீலா ஆபிசிலேயே அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். தான் உயிருடன் திரும்பிச் சென்று அவளைப் பார்ப்பாமோ என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. ராஜுவிடம், தமயந்தியின் ஜாகையைக் கண்காணிக்கச் சொன்னதற்குப் பதிலாக பாஸ்கரின் ஜாகையைக் கண்காணிக்கச் சொல்லி இருந்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இருந்த போதிலும் இப்பொழுது அவர் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பாஸகருக்கும், சுந்தருக்கும்தான் அவர் அங்கே அடைபட்டிருப்பது தெரியும். ஆனால் அவரைக் காப்பாற்றக் கூடியவர்கள் யாருமில்லை.

சுந்தர் இளகிய மனம் படைத்தவன் என்றே அவருக¢குத் தோன்றியது. இருந்தபோதிலும் அவன் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றுவான் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஏனென்றால் பாஸ்கரின் கட்டளையை அவன் நிறைவேற்றாவிட்டால் சிறிதும் ஈவிரக்கமில்லாமல் சுந்தரைக் கொன்று விடுவான் பாஸ்கர் என்று அவருக்குத் தெரியும். தனக்காக, இருபது ரூபாயைப் பெற்றுக் கொண்டு சாவி கொடுத்த வேணுவை தனக்குத் தெரிந்தே பாஸ்கர் சுட்டுக் கொன்றதையும் எண்ணிப் பார்த்தார் பரஞ்சோதி. வேணுவின் மரணத்திற்குத் தான்தான் காரணமென்று அவர் மனச்சாட்சி உறுத்தியது. ஒருக்கால் தன்னை எதிர்பார்த்தே, சுந்தரை வேணுவுக்குத் தெரியாமல் கொண்டு வந்து அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே போவதாகவும், தான் திரும்பி வர ஒருமணி நேரமாகும் என்றும் பாஸ்கர், வேணுவிடம் கூறிவிட்டுச் சென்றிருக்க வேண்டும்.

மெதுவாக எழுந்து நிற்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி சிறியதாக இருந்ததால் அவராக எழுந்து நிற்க முடியவில்லை. அதனால் மீண்டும் கீழே உட்கார்ந்து கொண்டார் பரஞ்சோதி. அங்கிருந்து தப்பிச் செல்வதென்பது முடியாத காரியமென்று அவருக்குத் தோன்றியது. வரப் போகும் ஆபத்தை எதிர்பார்த்து அங்கே காத்துக் கொண்டிருப்பதைத் தவிர அப்பொழுது அங்கே செய்யக்கூடியது ஒன்றுமில்லை. சிலவினாடிகளில், ஒரு ஜோடி நெருப்புக் கோளங்கள் தோன்றின. ஒரு எலி வருகிறதென்பதைப் புரிந்து கொண்ட பரஞ்சோதி அதைச் சமாளிப்பதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டார். தனக்கருகே கிடந்த கற்களில் சிலவற்றைத் தன் கைகளால் துழாவி எடுத்து வைத்துக் கொண்டார். டார்ச் விளக்கை உபயோகிக்க அவர் விரும்பவில்லை. இருட்டிலேயே தனது எதிரியைச் சமாளிப்பதென்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

ஆனால் இரண்டு நெருப்புகள் தோன்றிய இடத்தில் இப்பொழுது எட்டு நெருப்புக் கோளங்கள் காட்சியளித்ததைக் கண்டதும் பரஞ்சோதியின் இரத்தம் உறைந்து விடும் போல இருந்தது. தன்னைத் தாக்குவதற்கு நான்கு எலிகள் வந்துள்ளன என்பதைப் புரிந்து கொண்டதும் அவர் கதி கலங்கிப் போய் விட்டார்.

அந்த எலிகள் மெதுவாகப் பரஞ்சோதியை நோக்கி நகர்ந்தன. தன்னிடமிருந்த கற்களை, அவற்றை நோக்கி வீசினார். உடனே அந்த எலிகள் பயங்கரமாகத் கத்தியபடி அங்குமிங்கும் ஓடின. பிறகு, மீண்டும் பரஞ்சோதியை நோக்கி ஓடிவந்தன. அவற்றை பயமுறுத்துவதற்காக அவர், தனது பலங் கொண்ட மட்டும் பலவிதமான சத்தங்களை எழுப்பினார். அதனால் அவர் தொண்டை வலித்த போதிலும், அந்த எலிகள் அந்தக் கூச்சலைக் கேட்டு பயந்து போய் சில அடி தூரம் பின்னால் சென்று நின்று கொண்டு பரஞ்சோதியை தங்களது பயங்கர விழிகளால் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பரஞ்சோதி விடாமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். அந்தச் சமயத்தில், "பரஞ்சோதி! பரஞ்சோதி! எங்கே இருக்கிறீர்கள்?" என்று சுசீலாவின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

                                                                                                  -இன்னும் வரும்...!
மேலும் வாசிக்க... "பதியைக் கொன்ற பாவை - 9"